India

“ஆக்சிஜன் எப்போது வேண்டுமானாலும் அதிகமாக தேவைப்படலாம்.. தயாராக இருங்கள்” - ஒன்றிய அரசு எச்சரிக்கை!

மருத்துவ ஆக்சிஜனை தேவையான அளவுக்கு கையிருப்பில் வைத்துக்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 1.94 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றும் தீவிரமாக பரவி வரும் சூழலில், அதனை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், போதுமான ஆக்சிஜனை இருப்பு வைத்துக்கொள்ளுமாறு அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், குறைந்தபட்சம் 48 மணிநேரத்துக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்.

திரவ நிலை மருத்துவ ஆக்சிஜனை தங்கு தடையின்றி எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் கருவிகள் செயல்படும் நிலையில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: இந்தியாவில் கொரோனா 3 வது அலை எப்போது குறையும்?.. IIT பேராசிரியர் கூறிய முக்கிய தகவல்!