India

Vodafone Idea-வை வாங்குகிறதா ஒன்றிய அரசு..? - இயக்குநர்கள் கூட்டத்தில் அதிரடி முடிவு - அடுத்து என்ன?

கடனில் சிக்கித் தவிக்கும் வோடஃபோன் ஐடியாவை மீட்கும் திட்டத்தின் கீழ் அதன் 35.8% பங்குகளை ஒன்றிய அரசுக்கு வழங்க அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இந்திய தொலை தொடர்புத் துறையில் ஜியோவை எதிர்கொண்டு ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே தாக்குப் பிடித்து நிற்கின்றன. வோடஃபோன் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 27 கோடி வாடிக்கையாளர்கள் இருந்தபோதிலும் அந்நிறுவனம் சந்தையில் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளப் போராடி வருகிறது.

தனித்தனியாக இயங்கி வந்த வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைந்து வோடஃபோன் ஐடியா என பெயர் மாற்றப்பட்டது. இந்த நிறுவனத்தில் ஆதித்யா பிர்லா குழுமத்துக்கு 26%, வோடஃபோன் நிறுவனத்துக்கு 45.2% பங்குகள் உள்ளன.

இந்நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல 25,000 கோடி நிதி திரட்ட கடந்த ஆண்டு முடிவெடுக்கப்பட்டது. ஆனால் முதலீட்டாளர்கள் யாரும் முதலீடு செய்ய முன்வரவில்லை. அந்நிறுவனம் ஒன்றிய அரசுக்கு மட்டுமே ரூ.1.5 லட்சம் கோடிக்கு மேல் பணம் செலுத்த வேண்டியுள்ளது.

மேலும், வங்கிகளிடமிருந்து பெறப்பட்டுள்ள ரூ.23 ஆயிரம் கோடி கடனைச் செலுத்தவும் முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

வோடஃபோன் ஐடியாவை மீட்கும் திட்டத்தில், தனது 35.8 சதவீத பங்குகளை ஒன்றிய அரசிடம் வழங்க அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக ஒன்றிய அரசு இருக்கும்.

வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் 35.8% பங்கு உரிமையாளராக அரசு இருக்கும். இந்தப் பங்கின் சந்தை மதிப்பு 16 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். பின்னர் வோடஃபோன் நிறுவனம் 28.5% பங்குகளும், ஆதித்யா பிர்லா குழுமம் 17.8% பங்குகளும் வைத்திருக்கும்.

Also Read: Airtel, VI, Jio முடிவால் அதிருப்தியில் இருக்கும் வாடிக்கையாளர்களை கவருமா BSNL?- புதிய திட்டத்திற்கு ரெடி!