India

தந்தையைக் கொன்றுவிட்டு போலிஸாரிடம் நாடகமாடிய மகன்... சிகிச்சை பெற்ற தாய் வாக்குமூலத்தால் அம்பலமான உண்மை!

தந்தையை கத்தியால் குத்திக் கொன்று, தாயையும் தாக்கிய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் பிரமோத் பனேரியா. இவர் தனது மனைவி மற்றும் 27 வயதாகும் மகன் லோகேஷூடன் வசித்து வந்துள்ளார்.

சமீபத்தில், பெற்றோருக்கும் மகனுக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. அப்போது, தாய் மற்றும் தந்தையை லோகேஷ் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

சண்டையின்போது லோகேஷுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. பின்னர் ஆம்புலன்ஸை வரச்சொல்லுமாறு வாட்ச்மேனிடம் லோகேஷ் கூறியுள்ளார். ஆம்புலன்ஸ் வந்ததும், 3 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில், தந்தை பிரமோத் படுகாயமடைந்த நிலையில், அவர் உயிரிழந்தார். போலிஸார் விசாரித்தபோது, தந்தை பிரமோத் தன்னையும், தாயாரையும் தாக்கிவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக லோகேஷ் கூறியுள்ளார்.

அவர் மீது சந்தேகமடைந்த போலிஸார், லோகேஷை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், அவரது தாயாருக்கு உடல் நலம் தேறிய நிலையில், நடந்த உண்மையை போலிஸாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து லோகேஷை கைது செய்த போலிஸார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தந்தை பிரமோத் தினமும் குடித்து விட்டு வந்து, தன்னை சரமாரியாக தாக்குவார் என்றும், தாயாருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும் என்றும், அவர்களின் தொல்லையிலிருந்து தப்பிக்க அவர்களை கொல்ல திட்டமிட்டதாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

Also Read: இருமல் மருந்து சாப்பிட்ட 3 குழந்தைகள் பலி.. விஷமான மருந்தை பரிந்துரைக்க வேண்டாம் என NCPCR அறிவுறுத்தல்!