India

6 மணி நேரம்.. 1,000 போலிஸாரை அலைக்கழித்த இளம்பெண் : நாக்பூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?

தன்னை சிலர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துவிட்டதாக பொய் புகார் அளித்து 19 வயது இளம்பெண் ஒருவர் காவல்துறையினரை சுற்றலில் விட்ட சம்பவம் நாக்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், நேற்று (டிச., 13) காலை 11 மணியளவில் காலம்னா பகுதி காவல் நிலையத்திற்கு வந்து தன்னை இருவர் சேர்ந்து சிக்ஹலி பகுதியில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் அளித்தார்.

அந்த இளம்பெண் காலையில் இசை வகுப்புக்கு சென்று கொண்டிருந்தபோது வெள்ளை நிற வேனில் வந்த இருவர் தன்னிடம் வழிகேட்டதாகவும், அப்போது அவர்கள் தன்னை வேனுக்குள் இழுத்துப் போட்டு முகத்தை துணியால் மூடி எங்கோ ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துவிட்டதாகவும் புகார் அளித்தார்.

இதையடுத்து போலிஸார் உடனடியாக களத்தில் இறங்கி குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். நாக்பூர் நகர காவல் ஆணையர் அமிதேஷ் குமார், கூடுதல் ஆணையாளர் சுனில் உள்ளிட்ட உயரதிகாரிகள் நேரடியாக வந்து தேடுதல் வேட்டையை கண்காணித்தனர்.

குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக 1000 போலிஸார் அடங்கிய 40 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. இளம்பெண் கூறிய வெள்ளை வேனை தேடும் முயற்சியில் நகர் முழுவதும் 250 சிசிடிவி கேமராக்களை போலிஸார் ஆய்வு செய்தனர்.

சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, புகார் கூறிய பெண் நாக்பூர் வெரைட்டி ஸ்குயர் பகுதியில் பேருந்தை விட்டு இறங்கியதும், அங்கிருந்து நடந்து ஜான்சி ராணி சதுக்கத்தை அடைந்து ஆட்டோ பிடித்து ஆனந்த் டாக்கீஸ் ஸ்கொயரில் இறங்கியதும், பின்னர் ஆட்டோ பிடித்து வெவ்வேறு இடங்களுக்குச் சென்றதும் நேர வாரியாக பதிவாகியிருந்தது.

பின்னர், 11.04 மணியளவில் காவல் நிலையத்திற்கு அந்தப் பெண் புகார் கொடுக்க நடந்து வந்ததும் சிசிடிவி கேமரா மூலம் தெளிவானது. இதையடுத்து அந்த இளம்பெண் பொய் புகார் அளித்ததை போலிஸார் கண்டறிந்தனர்.

அப்பெண்ணிடம் விசாரித்ததில், தனது காதலரை திருமணம் செய்வதற்காகவே இதுபோல பொய்யான புகார் கொடுத்ததாக உண்மையை ஒப்புக்கொண்டார்.

பொய்யாக கூட்டு பாலியல் வல்லுறவு புகார் அளித்து, 1000க்கும் மேற்பட்ட போலிஸாரை 6 மணி நேரத்திற்கும் மேலாக அலைக்கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ரூ.62 ஆயிரம் பணத்திற்காக பெற்ற மகன்களை கொத்தடிமைகளாக விற்ற தந்தை... அதிரடியாக மீட்ட கோட்டாட்சியர்!