India
“ஹெலிகாப்டர் 12.08க்கு கட்டுப்பாடு மையத்துடனான தொடர்பை இழந்தது”: நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் விளக்கம்!
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், “ஜெனரல் பிபின் ராவத் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு படைக் கல்லூரியில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவ அதிகாரிகளுடன் உரையாட குன்னூருக்கு பயணமானார்.
இந்திய விமானப் படையின் Mi-17V-5 ரக ஹெலிகாப்டர், கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து நேற்று முற்பகல் 11.48 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
12.08 மணியளவில் சூலூரில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்துடனான தொடர்பை இழந்தது. இதனையடுத்து குன்னூர் அருகே காட்டுப்பகுதியில் சிலர் தீப்பிடித்து எரிவதை பார்த்து அங்கு சென்றபோது அங்கு ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கி தீப்பிடித்து எரிவதை பார்த்தனர்.
மாவட்ட நிர்வாகத்தினர் மீட்புப்படையை விரைவாக அந்த இடத்துக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து உயிர் பிழைத்தவர்களை மீட்கும் முயற்சி நடைபெற்றது. மீட்கப்பட்டவர்கள் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் 13 பேர் பரிதாபமாக பலியான நிலையில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் உயிர் காக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,
இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத், பிபின் ராவத்தின் ராணுவ ஆலோசகர் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிட்டர், கர்னல் ஹர்ஜிந்தர் சிங், விங் கமாண்டர் பி.எஸ்.சவுகான், ஸ்குவாட்ரன் லீடர் குல்தீப் சிங், வாரண்ட் ஆஃபிசர் ரானா பிரதாப் தாஸ், ஜூனியர் வாரண்ட் ஆஃபிசர் அரக்கல் பிரதீப், ஹவில்தார் சத்பல் ராய், நாயக் குருஸ்வாக் தேஜா, நாயக் ஜிதேந்திரா குமார், லேன்ஸ் நாயக் விவேக் குமார், லேன்ஸ் நாயக் சாய் தேஜா ஆகிய 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து விசாரிக்க இந்திய விமானப்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, இந்த விசாராணை ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங், ஏர் ஆஃபிசர் கமாண்டிங் இன் சீஃப் ஆகியோர் தலைமையில் இது நடக்கும்.
உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் உடல் இன்று மாலைக்குள் டெல்லி கொண்டுவரப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்.” என விளக்கமளித்தார்.
Also Read
-
"தலைமை நீதிபதி மீதான தாக்குதலில் சமூகத்தின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது" - முதலமைச்சர் கண்டனம் !
-
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நோக்கி செருப்பு வீச்சு... பின்னணியில் சனாதனம் - முழு விவரம் உள்ளே !
-
திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! : விவரம் உள்ளே!
-
ரூ.209.18 கோடியில் 20 சமூகநீதி விடுதிகள், 37 பள்ளிக் கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ இந்தி மொழிபெயர்ப்பு நூல்!” : முதலமைச்சர் வெளியிட்டார்!