உயிரிழந்த பெண்
India

ப்ளவுஸ் தைத்து கொடுக்க மறுத்த கணவர்; மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மனைவி.. ஐதராபாத்தில் விபரீத சம்பவம்

ஐதராபாத்தின் அம்பெர்பேட்டையில் உள்ள கோல்நாகா திருமலா நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். அவருக்கு விஜயலக்‌ஷ்மி என்ற மனைவியும் பள்ளிக்கு செல்லும் இரு குழந்தைகளும் இருக்கின்றனர்.

வீடு வீடாகச் சென்று புடவை, ஜாக்கெட் துணி விற்பதும், வீட்டிலேயே ஜாக்கெட் தைக்கும் தொழிலையும் செய்து வருகிறார் ஸ்ரீநிவாஸ். அவ்வகையில், தனது மனைவி விஜயலக்‌ஷ்மிக்கும் ஸ்ரீநிவாஸ் ஜாக்கெட் தைத்து கொடுத்திருக்கிறார். ஆனால் அவருக்கு பிடித்த மாதிரி தைக்காததால் விஜயலக்‌ஷ்மி மனமுடைந்து போயிருக்கிறார்.

இதன் காரணமாக ஸ்ரீநிவாஸ், விஜயலக்‌ஷ்மி இடையே வெகுநேரம் வாக்குவாதம் நடந்திருக்கிறது. மேலும் அந்த ஜாக்கெட்டை சரியாக தைத்து தரும்படி விஜயலக்‌ஷ்மி கேட்டபோதும் ஸ்ரீநிவாஸ் அதனை செய்ய மறுத்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் போட்ட தையல்களை எல்லாம் பிரித்துவிட்டு நீயே தைத்துக் கொள் என்றும் ஸ்ரீநிவாஸ் கூறியதால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளான விஜயலக்‌ஷ்மி அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டிருக்கிறார்.

Also Read: ’S EX’ என்ற நம்பர் ப்ளேட்டால் மன உளைச்சலுக்கு ஆளான டெல்லி பெண்: நடந்தது என்ன?

பள்ளி முடிந்து வீடு திரும்பிய குழந்தைகள் அறை பூட்டியே கிடப்பதை கண்டு தொடர்ந்து தட்டியிருக்கிறார்கள். வெகு நேரமாகியும் விஜயலக்‌ஷ்மியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனையடுத்து ஸ்ரீநிவாஸிடம் குழந்தைகள் தெரிவித்ததை அடுத்து கதவை உடைத்து திறந்த போது விஜயலக்‌ஷ்மி இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்றிருக்கிறார்.

பின்னர் சம்பவம் தொடர்பாக அறிந்து விரைந்து வந்த அம்பர்பேட்டை போலிஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர். அதில், இருவருக்குள்ளும் சண்டை வரும் போதெல்லாம் அறைக்குள் சென்று பூட்டிக்கொள்வது வழக்கம்.

அதுப்போலவே இம்முறையும் செய்திருக்கிறார். கோபம் குறைந்த பிறகு பேசிக்கொள்ளலாம் என விட்டுவிட்டேன் என்று ஸ்ரீநிவாஸ் கூறியிருக்கிறார். மேலும் தற்கொலை கடிதம் எதுவும் எழுதாததால் விஜயலக்‌ஷ்மியின் இறப்பை சந்தேக மரணம் என்ற கோணத்தில் போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஜாக்கெட்டை ஒழுங்காக தைத்து தராத காரணத்தால் 36 வயதேயான பெண் தற்கொலை செய்துக் கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 3 அடி உயரமுடையவர் ஓட்டுநர் உரிமம் பெற்றது எப்படி? ஐதராபத்தைச் சேர்ந்தவரின் நெகிழ்ச்சி கதை!