India

35 ஆண்டுகள் காத்திருந்து காதலியை கரம்பிடித்த முதியவர்.. நெகிழவைக்கும் காதல் கதை!

கர்நாடக மாநிலம் மைசூர் நகரில் உள்ள ஹெப்பாலா பகுதியைச் சேர்ந்தவர் சிக்கண்ணா (65). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயம்மாவை காதலித்துள்ளார். ஆனால் அப்போது அவர் காதலுக்கு எதிர்ப்பு எழுந்ததால் இவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை.

ஜெயம்மாவுக்கு வேறொருவருடன் திருமணமாகி குழந்தைகள் இல்லாததால், அவரது கணவர், ஜெயம்மா 30 வயதில் இருக்கும்போதே விட்டுச் சென்றுவிட்டார்.

இதன்பிறகு, சிக்கண்ணா ஜெயம்மாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறியும் ஜெயம்மா ஏற்கவில்லை. தனது காதலை ஏற்காததால் ஜெயம்மாவை நினைத்து திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார் சிக்கண்ணா.

இந்நிலையில், சிக்கண்ணாவின் காதலை ஏற்று, அவரைத் திருமணம் செய்ய சம்மதித்தார் ஜெயம்மா. சுமார் 35 வருடங்களுக்குப் பிறகு சிக்கண்ணாவுக்கு ஜெயம்மாவை கரம்பிடிக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று இந் முதிய தம்பதியர் மாண்டியா மாவட்டம் மேல்கோட்டை பகுதியில் உள்ள கோயில் எதிரே உள்ள மண்டபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

65 வயதுடைய சிக்கண்ணாவும், ஜெயம்மாவும் புது மணமக்களாக அலங்காரம் செய்துகொண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணம் மூலம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, காதலர்கள் திருமண உறவில் இணைந்தனர்.

35 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின் காதலியை காதலர் கரம்பிடித்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

Also Read: “பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்.. ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்த்த ஊழியர்கள்” : நெகிழ்ச்சி சம்பவம்!