India

“புது வைரஸ் வருதே... என்ன செய்யப்போறீங்க?” : ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

புதிய வகை கொரோனா புதிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. ஒன்றிய அரசு என்ன செய்யப்போகிறது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், சர்வதேச விமான நிலையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், காற்று மாசு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, புதிய வகை கொரோனா வைரஸ், புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அரசின் தலைமை வழக்கறிஞர், “புதிய வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

ஓமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ள ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம், சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து இந்தியா வருவோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: "தமிழகத்தில் இதுவரை 7 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!