India

3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற காரணம் என்ன? - விளக்கமளிக்க ஒன்றிய அரசு திட்டம்?!

நாளை நடைபெறும் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற ஒப்புதல் அளிக்க வாய்ப்பு. நாடாளுமன்ற இரு அவைகளிலும் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான காரணங்களை வேளாண் அமைச்சர் விளக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று வேளாண் சட்டங்களையும் ஒரே சட்டமசோதா மூலம் திரும்பப்பெற ஒன்றிய அரசு தயாராகி வருகிறது. நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யும் போது எதற்காக சட்டங்கள் திரும்பப் பெறப்படுகிறது என்பதற்கான விளக்கம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதே மசோதாக்களை நிறைவேற்றும் போது நாடாளுமன்ற இரு அவைகளிலும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எதிர்கட்சிகள் வலியுறுத்தின. அதனை ஏற்க மாநிலங்களவை தலைவர் மறுத்தபோது அமளி ஏற்பட்டது. அப்போது 9 எம்.பிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது அரசே அந்த சட்டங்களை திரும்பப் பெரும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அரசை கடுமையாக குற்றம்சாட்ட எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றன.