India

ரூ.1.64 கோடி மதிப்பிலான 4027 அமேசான் பொருட்களை ஆட்டையப்போட நினைத்த கும்பல்: போலிஸில் சிக்கியது எப்படி?

கர்நாடகா மாநிலம், தேவனஹள்ளி அருகே புடிகெரே தொழிற்பேட்டையில் அமேசான் நிறுவனத்திற்குச் சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. இங்கு தங்களின் வாடிக்கையாளர்களுக்கான பொருட்களை மொத்தமாகச் சேகரித்து வைத்து, பிறகு இங்கிருந்து பிரித்து எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.

அப்படி அக்டோபர் 30ம் தேதி அமேசான் குடோனில் இருந்து மொபைல் போன்கள், அழகுசாதனப் பொருட்கள் என 4027 பொருட்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது.இந்த லாரியை அசாம் மாநிலத்தை சேர்ந்த வசி அஜை என்பவர் ஓட்டிச் சென்றார். அவருக்கு உதவியாக அபிநத், அப்துல் அப்துல் ஹுசைன் ஆகிய இரண்டு பேர் சென்றுள்ளனர்.

இதையடுத்து இந்த லாரி குறிப்பிட்ட வழியில் செல்லாமல் வேறு பாதையில் சென்றுள்ளது. இதை ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்டுபிடித்த அமேசான் ஊழியர்கள் அவர்களைத் தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து சிறிது நேரத்திலேயே ஜிபிஎஸ் கருவியும் ஆஃப் செய்யப்பட்டது.

இதனால் லாரி எங்கு இருக்கிறது என்பதை அமேசான் நிறுவனத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து போலிஸாரின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு லாரி ஓட்டுநர் உட்பட மூன்று பேரையும் மடக்கிப் பிடித்து போலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், பொருட்களை வேறு லாரிக்கு மாற்றியதும், பாதி விலையில் பொருட்களை அனைத்தையும் விற்று பணம் சம்பாரிக்கா திட்டம் போட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் அதன் மொத்த மதிப்பு ரூ.1.64 கோடியாகும்.

மேலும், இந்த கொள்ளையடித்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். லாரியோடு அமேசான் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கிருஷ்ணர் கை உடைஞ்சுபோச்சு.. கதறியபடி வந்த பூசாரி : கட்டுப்போட்ட மருத்துவர்கள் - உ.பியில் விநோத சம்பவம்!