India

வெடிகுண்டாக மாறிய ஐஸ்கிரீம் பந்து.. வெடித்ததில் சிறுவன் காயம்: கேரளாவில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம்!

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்திற்குட்பட்ட நரிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவர்த் பிரதீப். சிறுவனான பிரதீப் நேற்று தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது சிறுவன் ஒருவன் அடித்ததில் பந்து அருகே இருந்த வீட்டிற்குள் விழுந்தது. இதனால் பந்தை எடுப்பதற்காகச் சிறுவன் பிரதீப் அங்குச் சென்றுள்ளார். அப்போது மூன்று ஐஸ்கிரீம் பந்துகள் இருந்துள்ளது.

இதைப்பார்த்த பிரதீப், அதில் ஒன்றை எடுத்துத் திறந்துள்ளார். அப்போது அந்த ஐஸ்கிரிம் பந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதில் சிறுவனுக்குப் பலத்தக் காயம் ஏற்பட்டது.

பிறகு அருகே இருந்தவர்கள் சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி தகவல் அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து வெடித்து சிதறியிருந்த ஐஸ்கிரீம் பந்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஸ்கிரீம் பந்து வெடிகுண்டாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஐஸ்கிரீம் பந்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் இது முதல்முறை அல்ல. முன்னதாக கண்ணூர் பகுதியிலும் இதுபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கேஸ் வெடித்ததில் வீடுகள் தரைமட்டம்; மூதாட்டி பலி; 3 மணிநேரமாக தொடரும் மீட்பு போராட்டம் -சேலத்தில் துயரம்!