India

“புனீத் இறந்தது இப்போதான் தெரியும்.. என் கண் முன்னால் வளர்ந்த குழந்தை” : நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த புனீத் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்திய திரைப் பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து புனீத் ராஜ்குமார் உடல் காண்டீவராவில் உள்ள அவரது தந்தை நினைவிடத்திற்கு அருகிலேயே அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தி.மு.க எல்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, சூர்யா, பிரபு உள்ளிட்டோர் புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நடிகர் ரஜினிகாந்த் புனீத் ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசிய ஆடியோவில், “அனைவருக்கும் வணக்கம். எனக்கு சிகிச்சை முடிந்து நல்ல முறையில் குணமாகிட்டு வர்றேன். நான் மருத்துவமனையில் இருக்கும்போது புனீத் ராஜ்குமார் அகால மரணம் அடைந்து விட்டார்.

அந்தச் செய்தி எனக்கு இரண்டு நாள் கழித்துதான் தெரியும். அதைக் கேட்டு நான் ரொம்ப ரொம்ப வேதனைப்பட்டேன். மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தது. என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த குழந்தை. திறமையான அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை புனீத். பேரும் புகழும் உச்சியில் இருக்கும்போது, இவ்வளவு சின்ன வயதிலேயே நம்மை விட்டு மறைந்திருக்கிறார்.

அவருடைய இழப்பு, கன்னட சினிமாவில் ஈடுகட்டவே முடியாது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை. புனீத் ராஜ்குமார் ஆத்மா சாந்தியடையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: மழைக் காலத்தில் மக்களுக்கு குடையாக மாறிய முதல்வர்... நனைந்தபடி சுற்றிச் சுழன்று ஆய்வு! #Album