India

ரூ.500 கோடிக்கு மூட்டை மூட்டையாக கள்ள நோட்டு.. போலிஸாரை அதிரவைத்த கும்பல் : நடந்தது என்ன?

கர்நாடகா மாநிலம், பெங்களூரு எச்.பி.ஆர் லே-அவுட் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களின் நடத்தையில் சந்தேகமடைந்த பொதுமக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

பிறகு அங்கு வந்த போலிஸார் அந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் தடை செய்யப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்ததைப் பார்த்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட நோட்டுகளை மாற்ற முயற்சித்தது தெரியவந்தது. மேலும் இவர்களிடம் ரூ.45 லட்சம் வரை தடை செய்யப்பட்ட நோட்டுகள் இருந்துள்ளன.

மேலும், கேரளாவிலிருந்து தடை செய்யப்பட்ட நோட்டை எடுத்து வந்ததாகக் கூறினர். இதுகுறித்து கேரள போலிஸாருக்கு கர்நாடகா போலிஸார் தகவல் கொடுத்தனர். உடனே கேரள போலிஸார் அவர்கள் கூறிய பண்ணை வீட்டில் ஆய்வு செய்தபோது 12 பெட்டிகளில் தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் கட்டுக் கட்டாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பிறகு, அங்கிருந்து இரண்டு பேரிடம் போலிஸார் விசாரணை செய்தபோது கலர் ஜெராக்ஸை பயன்படுத்திப் தடை செய்யப்பட்ட நோட்டை அச்சடித்து மாற்ற முயற்சித்ததாக அந்த நபர்கள் கூறினர். இதையடுத்து அவர்களை கைது செய்து 500 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை போலிஸார் பெங்களூரு எடுத்து வந்தனர்.

இதையடுத்து தடை செய்யப்பட்ட நோட்டுகளை அச்சடித்த சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், தயானந்த், வெங்கடேஷ், மஞ்சுநாத் ஆகிய ஐந்து பேரை போலிஸார் கைது செய்தனர். இதில் வெங்கடேஷ் என்பவர் பெங்களூரு மாநகராட்சியில் உதவி ஒப்பந்ததாரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "என்னது போராட்டம் பண்ணா... மோடி படம் காணாம போகுதா?" : அதிர்ச்சியில் பா.ஜ.க தொண்டர்கள்!