India

'9 மாத குழந்தைக்கும் தலைக்கவசம் கட்டாயம்': புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட ஒன்றியப் போக்குவரத்துத்துறை!

இந்தியா முழுவதும் இரு சங்கர வாகனத்தை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் தலைக்வசம் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தலைக்கவசம் அணியாதவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 129, 09.08.2019 தேதியிட்ட மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) சட்டம் 2019 மூலம் திருத்தப்பட்டுள்ளது.

அதன்படி இருசக்கர வாகனத்தில் செலும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி வரைவு விதிகளை உருவாக்கிக் கடந்த அக்டோபர் 21ம் தேதி சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்," இரு சக்கர வாகனத்தில் நான்கு வயது குந்தைகயை அழைத்துச் செல்லும் போது ஓட்டுநருக்கும், குழந்தை இணைக்கும் பெல்ட் போன்ற பாதுகாப்பைப் பயன்படுத்த வேண்டும். வாகனத்தில் பின்னால் அமரும் 9 மாத குழந்தைகள் முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் தலைக்கவசம் அணிவதையும் ஓட்டுநர் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது 40 கிலோமீட்டருக்கு மேல் செல்லக்கூடாது. பி.ஐ.எஸ்-ஆல் பரிந்துரைக்கப்பட்ட அம்சங்கள் கொண்ட தலைக் கவசங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்"போன்ற கட்டுப்பாடுகளைச் சாலைப் போக்குவரத்துத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆட்சேபனைகளோ, கருத்துகளோ, ஆலோசனைகளோ இருந்தால் 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். இதை comments-morth@gov.in மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மற்றும் கடிதம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: OBCக்கான உச்ச வரம்பை EWSக்கும் பொருத்துவது எப்படி சமநிலையாகும்? - மோடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!