India

குழந்தை வேண்டி நரபலி... ஒரே வாரத்தில் 2 பெண்கள் கொலை - சாமியார் உட்பட 5 பேர் கைது : ம.பி.யில் பயங்கரம்!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்தவர் பந்து மதுரியா. இவரது மனைவி மம்தா. இந்த தம்பதிக்குத் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் குழந்தை வேண்டிப் பல கோயில்களுக்குச் சென்று வந்துள்ளனர்.

இதையடுத்து இவர்களது உறவினர் நீரஜ் என்பவர் இந்த தம்பதியைப் பில்லி சூனியம் வைக்கும் சாமியாரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த சாமியார், "உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றால் நரபலி கொடுக்க வேண்டும்" என கூறியுள்ளார். இதனால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்து வந்துள்ளனர்.

இதையடுத்து கடந்த 21ஆம் தேதி குவாலியரில் இறந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற போலிஸார் இதுகுறித்து விசாரணை செய்தபோது, இறந்தது பாலியல் தொழிலாளி என்பது தெரியவந்தது.

மேலும், ஆந்தப் பெண்ணை நீரஜ் அழைத்துச் சென்று கழுத்து நெரித்து கொலை செய்துள்ளார். பிறகு அவரது சடலத்தைச் சடங்கு செய்வதற்காகச் சாமியாரிடம் கொண்டு செல்லும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்துபோன நீரஜ் சடலத்தை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதேபோல் இவர் மற்றொரு பாலியல் தொழிலாளியையும் நரபலிக்காக கொலை செய்துள்ளார்.

ஒரே வாரத்தில் இரு பெண்களை நீரஜ் கொலை செய்ததை அறிந்து போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். மம்தா, அவரது கணவர் பந்து, மம்தாவின் சகோதரி மீரா, மீராவின் நண்பர் நீரஜ், சாமியார் யாதவ் ஆகிய ஐந்து பேரையும் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: தண்ணீரில் மூழ்கடித்து 3 மாத குழந்தை கொலை.. YouTube வீடியோ பார்த்து தாய் செய்த கொடூர செயல் - நடந்தது என்ன?