India
இனி நாள்தோறும் 3 மணி நேரம் மின்சாரம் ‘கட்’ : பஞ்சாப் அரசின் அறிவிப்பால் மக்கள் அச்சம்!
இந்தியா முழுவதும் நிலக்கரிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதால் விரைவில் நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அதேபோல், டெல்லி முதல்வர் அரவிந்த் ஜெக்ஜரிவாலும், ஒருநாள் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியே கையிருப்பில் உள்ளதாகவும், தொடர்ந்து நிலைமையைக் கவனித்து வருவதாகவும் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி முதல்வரைப் போன்றே, ஜெகன்மோகன் ரெட்டி, சரண்ஜித் சிங் சன்னி என தொடர்ந்து பல்வேறு மாநில முதல்வர்களும் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிலக்கரித் தட்டுப்பாடு குறித்து ஒன்றிய அரசுக்கு கடிதங்கள் மூலம் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனைக் நடத்தப்பட்டு வருகிறது. இதில் துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், தினமும் 3 மணி நேரம் மின் வெட்டு ஏற்படும் என பஞ்சாப் மாநில அரசுக்குச் சொந்தமான பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வருகிற புதனன்று முதலே அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக லெஹ்ரா மொஹபத் ஆலை மற்றும் தல்வாண்டி சபோ ஆலையில் உள்ள அலகுகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ரோபரில் இரண்டு அலகுகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் 1,000 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மின்வெட்டு தவிர்க்க முடியாததாகியுள்ளது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே ராஜஸ்தானில் ஒரு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் மின்வெட்டு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்தடுத்து பல மாநிலங்களில் மின்வெட்டு அறிவிப்பு குறித்த தகவல்கள் வருமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
Also Read
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!