India

வீட்டுக்கு அழைத்து கூட்டுபாலியல் வன்கொடுமை: பெண் போலிஸுக்கு நேர்ந்த கொடுமை- பாஜக ஆளும் மாநிலத்தில் அவலம்!

மத்திய பிரதேச மாநிலம், நீமட்ச் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் போலிஸ் ஒருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் நட்பாகப் பழகிவந்துள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர் தனது சகோதரருக்குப் பிறந்தநாள் விழா கொண்டாடுவதாகக் கூறி பெண் போலிஸை அழைத்துள்ளார்.

இந்த அழைப்பை ஏற்று பிறந்தநாள் விழாவிற்கு பெண் போலிஸ் சென்றுள்ளார். பிறகு விழா முடிந்தவுடன் அந்த வாலிபர் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து வலுக்கட்டாயமாகப் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், அதை வீடியோ எடுத்து, வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்கு அந்த வாலிபரின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த வீடியோவை பயன்படுத்தி பணம் பறிக்கவும் முயற்சித்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்துப் பாதிக்கப்பட்ட பெண் காவலர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய போலிஸார் வாலிபரின் தாயார் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதில் வாலிபரின் தாயார் மற்றும் அவரது நண்பரை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மூன்று பேரை போலிஸார் தேடி வருகின்றனர்.

Also Read: “மனைவி குளிக்கவில்லை என விவாகரத்து கோரிய கணவர்” : உத்தரப் பிரதேசத்தில் நடந்த வினோத வழக்கு - பின்னணி என்ன?