India

“இது கிடைக்கும் வரை கல்யாணம் பண்ண மாட்டேன்”.. முதல்வருக்குக் பகிரங்க கடிதம் எழுதிய இளம்பெண்: காரணம் என்ன?

கர்நாடகா மாநிலம், தவனகிரி மாவட்டம் ஹெச்.ராம்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.டி.பிந்து. இவர் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். இவர் அனுப்பிய இந்த கடிதம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

ஆர்.டி.பிந்து அனுப்பிய அந்த கடிதத்தில், “என்னுடைய கிராமம் தவனகிரியில் இருந்து 37 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து நகருக்குச் செல்ல சரியான சாலை, பேருந்து வசதி இல்லை. எங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் மருத்துவமனை, பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாயகொண்டா கிராமத்திற்குச் செல்ல வேண்டும்.

எங்கள் ஊரில் படித்த ஒரே ஒரு பட்டதாரி நான் மட்டும்தான். பேருந்து வசதி இல்லாததால் கல்லூரி விடுதியில் தங்கி என்னுடைய படிப்பை முடித்தேன். எங்கள் ஊருக்கு சாலை, பேருந்து வசதி செய்து கொடுக்கும் வரை நான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை.

நான் திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டால், எங்கள் கிராம மக்களுக்காகப் பேச யாரும் இல்லை. இதனால் தான் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என தெரிவித்திருந்தார். இந்த கடிதம் முதல்வரின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து சம்மந்தப்பட்ட கிராமத்திற்கு அதிகாரிகள் சென்றனர். இந்த கிராமத்திற்குச் செல்லும் சாலை மிகவும் மோசமாக இருந்ததால் இரண்டு கிலோமீட்டர் தூரம் அதிகாரிகள் நடந்தே சென்று கோரிக்கை வைத்த பிந்துவை சந்தித்து சாலை மற்றும் பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Also Read: "தந்தையின் கொலைக்கு பிரதமரிடம் நீதி கேட்கும் சிறுவன்” : வைரலாகும் உருக்கமான பேச்சு - பின்னணி என்ன?