India

“உணவுப் பொருளில் மாட்டுக்கறி கலப்படமா?” : மதவெறி கும்பலின் வாட்ஸ்அப் வதந்தியால் அதிர்ச்சி - உண்மை என்ன?

கேரள மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த முஸ்தபா, இன்று மிகப்பெரும் நிறுவனத்திற்கு அதிபராக உள்ளார். தனது உழைப்பாலும், சிந்தனையாலும் உருவான அவரது வளர்ச்சியை பொய் பிரச்சார வலதுசாரி கும்பல் சரிக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த முஸ்தபா பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு ‘ஐ.டி ஃப்ரெஷ் ஃபுட்ஸ்’ என்ற பெயரில் உணவு நிறுவனம் ஒன்றை 2005-ஆம் ஆண்டு தொடங்கினார். இந்த நிறுவனம், இட்லி, தோசை மாவு உள்ளிட்ட உணவுப் பொருள்களை விற்பனை செய்து வருகிறது.

‘ஐ.டி ஃப்ரெஷ் ஃபுட்ஸ்’ நிறுவனத்தின் உணவுப் பொருள்கள் தற்போது மைசூரு, மங்களூரு, மும்பை, புனே, ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜாமுந்திரி, சென்னை, எர்ணாகுளம், கோயம்புத்தூர், கொச்சின் மற்றும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இநநிலையில், அந்த நிறுனத்தின் உணவுப் பொருள் தயாரிப்பு குறித்து வாட்ஸ்அப்பில் ஒரு போலியான தகவல் வைரலாகப் பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த வாட்ஸ்அப் அவதூறு செய்தியில், ‘ஐ.டி ஃபுட்ஸ் உணவுப் பொருள்களில் மாட்டு எலும்புகள் மற்றும் கன்றுக்குட்டியின் வயிற்றில் இருக்கும் மாமிசம் சேர்க்கப்படுகிறது. அந்த நிறுவனத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமே வேலைக்கு நியமனம் செய்யப்படுகிறார்கள். அந்த நிறுவனம் தீவிரமான ஷரியா சட்டத்தைக் கடைப்பிடித்து 35 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்நிறுவனத்திற்கு எதிராக பலரும் மத ரீதியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தனர். இந்த வதந்தியால் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பலரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஐ.டி ஃப்ரெஷ் ஃபுட்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி முஸ்தபா, ‘வாட்ஸ்-அப்பில் பரவும் செய்தியில் துளியும் உண்மையில்லை. உணவுப் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைபிடித்து தரமான முறையில் நாங்கள் உணவுப் பொருட்களை தயாரிக்கிறோம்.

போலிச் செய்திகள் பரவுவதை நாம் தடுத்து நிறுத்தவேண்டும். சமூக வலைதளங்களில் போலிச் செய்திகள் மிக வேகமாக பரவுகின்றன. தவறான செய்திகள் பரவி லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது” எனக் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

Also Read: “யூ-ட்யூபில் பொய் செய்தி வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுங்க” : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!