India

"தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்": ஒன்றிய அரசுக்கு சிவசேனா அறிவுரை!

நாட்டின் 75வது சுதந்திர தினத்தில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்ட படத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் படம் தவிர்த்திருப்பது நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் பழிவாங்கும் செயல் என சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

அந்த கட்டுரையில், "சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்களிப்பும் இல்லாதவர்கள், சுதந்திரப் போராட்டத்தின் நாயகர்களில் ஒருவரான நேருவை ஒதுக்கிவைத்துள்ளனர். இது ஆரோக்கியமான செயல் அல்ல. இந்த அளவு ஜவஹர்லால் நேருவை வெறுப்பதற்கு அவர் என்ன செய்தார்? இன்று பொருளாதாரத்தை நகர்த்துவதற்காக ஒன்றிய அரசு விற்க முயலும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் நேருவால் உருவாக்கப்பட்டவைதான்.

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பள்ளி புத்தகப் பையில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படம் இருந்தது. இந்த படத்தை நீக்கினால் 13 கோடி வரை செலவாகும். இந்த பணத்தை கொரோனா தொற்றுக்கு எதிரகாப் பயன்படுத்தலாம். யார் படம் இருந்தால் என்ன அப்படியே பையை கொடுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது. ஆனால் ஒன்றிய அரசோ நேருவின் படத்தை நீக்குகிறது. தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் இருந்து ஒன்றிய அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பது முக்கியமான ஒன்று” : WHO விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பாராட்டு !