India

“மோடிக்கும், அமித்ஷாவுக்கும் ஆப்படித்தவர் என்பதாலேயே இந்த பழிவாங்கலா?” - சர்ச்சையில் நீதிபதிகள் நியமனம்!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மூத்த நீதிபதியான திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகில் குரேஷி இடம்பெறாதது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோருக்கு எதிரான தீர்ப்புகளை வழங்கியதாலேயே குரேஷி பழிவாங்கப்படுவதாக மூத்த வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைப்படி 2 ஆண்டுகளுக்குப் பின் அண்மையில் 9 உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். இந்த பட்டியலில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் மூத்தவரான ஏ.எஸ்.ஒகா பெயர் இடம்பெற்றுள்ள நிலையில், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அகில் குரேஷியின் பெயர் இடம்பெறவில்லை.

அகில் குரேஷியை விட பணி மூப்பு குறைந்த நீதிபதிகள் நீதிபதிகளாக பதவியேற்றுள்ள போதும் குரேஷிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது நீதித்துறையினர் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

குரேஷி பெயர் விடுபட்டதற்கான காரணம் வெளிப்படையாக அறிவிக்கப்படாத நிலையில், கடந்த காலங்களில் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக அவர் அளித்த தீர்ப்புகளை சுட்டிக்காட்டி மூத்த வழக்கறிஞர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர்.

சீனியாரிட்டி, நேர்மை, திறமை என அனைத்து தகுதிகளும் குரேஷிக்கு இருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் காலி பணியிடம் ஒன்று உள்ளபோதும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது கவலை அளிப்பதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள அகில் குரேஷி பல்வேறு அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர்.

2010ஆம் ஆண்டு குஜராத்தில் சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டவர்தான் நீதிபதி அகில் குரேஷி.

2011 ம் ஆண்டு குஜராத்தில் ஊழல் வழக்குகளை விசாரிக்க மேத்தா என்ற ஓய்வு பெற்ற நீதிபதியை லோக்ஆயுக்தா அமைப்பின் தலைவராக நியமித்தார் ஆளுநர் கமலா பேனிவால். அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி இந்த நியமனத்தை எதிர்த்தார். பிரச்சனை குஜராத் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆளுநர் நியமித்தது சரி என்று மோடிக்கு எதிரான தீர்ப்பை கொடுத்தவர் நீதிபதி அகில் குரேஷி.

இதுபோன்ற பல்வேறு வழக்குகளில் பா.ஜ.கவுக்கு எதிரான நியாயமான தீர்ப்புகளை வழங்கியதாலேயே அகில் குரேஷி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Also Read: “முக்கிய துறைகளை தனியார்மயமாக்கி, வேலைவாய்ப்புகளை பறிப்பதுதான் மோடி அரசின் திட்டமா?” - காங்கிரஸ் விளாசல்!