India

“யோகி ஆதித்யநாத் பொய் சொல்லுகிறார்” : 2 நாளில் 40 குழந்தைகள் பலி - உண்மையை போட்டுடைத்த பா.ஜ.க எம்.எல்.ஏ!

கொரோனா தொற்றுப் பாதிப்பின்போதும் சொந்தக் கட்சியினரிடமே ஆதித்யநாத் அரசு கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தின் செயல்பாடுகள் படுமோசம் என்று பா.ஜ.கவைச் சேர்ந்த அன்றைய ஒன்றிய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் துவங்கி ராம்கோபால் லோதி, ராம் இக்பால் சிங் உள்ளிட்ட மாநில அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ-க்களே குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் 40 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்குப் பலியாகி உள்ளதாகவும், ஆதித்யநாத் அரசோ அதனை மூடிமறைப்பதாகவும் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவரே பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

பெரோஷாபாத் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ மணிஷ் அசிஜா, இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பெரோஷாபாத் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் ஆகஸ்ட் 22 முதல் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 46 பேர் பலியாகி உள்ளனர். ஆகஸ்ட் 30 காலையில் கூட 6 குழந்தைகள் உயிரிழந்ததாக சோக செய்தியை கேட்டேன்.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் 4 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். நிலைமை ரொம்பமோசமாக உள்ளது. தாழ்வான இடங்களில் குப்பைகளுடன் கலந்து மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சியில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.

இதுபோன்ற சூழலில் நடவடிக்கை எடுப்பதற்காக பெரோஷாபாத்திற்கு 50 வாகனங்களை உ.பி. அரசு கடந்த ஏப்ரலில் அனுப்பியது. எனினும் இரண்டு தினங்களுக்கு முன்புதான் இந்த வாகனங்கள் தூய்மைப் பணியில் இறக்கி விடப்பட்டுள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.

முதல்வர் ஆதித்யநாத், திங்களன்று பெரோஷாபாத் மாவட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதாக மாநில அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதற்கு முன்னதாக, பா.ஜ.க எம்.எல்.ஏ மணிஷ் அசிஜா இந்த ட்விட்டர் பதிவை வெளியிட்டது பா.ஜ.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் ‘EPS கும்பல்’.. கொடநாடு கொலை - கொள்ளை விவகாரத்தில் வலுக்கும் மர்மம்!