India

"தயாராகுங்கள் - கொரோனா மூன்றாவது அலை வருகிறது": மாநிலங்களை எச்சரிக்கும் ஒன்றிய அரசின் நிபுணர்குழு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. பிறகு, படிப்படியாகக் குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாகக் கேரள மாநிலத்தில் மட்டும் நாட்டில் பதிவாகும் தொற்று எண்ணிக்கையில் பாதி இங்குபதிவாகி வருகிறது. கொரோனா வைரஸ் மூன்றாவது அலை குழந்தைகளை அதிகமாகத் தாக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அதேபோல், நாடு முழுவதும் 50% குழந்தைகளுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இந்நிலையில் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு வார்டுகளை தயார்ப்படுத்துமாறு மாநில அரசுகளுக்குத் தேசிய பேரிடம் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

ஒன்றிய உள்துறை அமைச்சகம் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் சார்பில் கொரோனா மூன்றாவது அலை குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதில், "மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு தாயார் நிலையில் இருக்க வேண்டும். மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், வெண்டிலேட்டர்கள் , ஆம்புலன்ஸ் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மேலும் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு வார்டுகளை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். மூன்றாவது கொரோனா அலை அக்டோபரில் உச்சம் தொடும். ஆனால் இரண்டாவது அலையின் தாக்கத்தை விட, மூன்றாவது அவலை குறைவாகத்தான் இருக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: 3வது அலை எச்சரிக்கை.. அதிநவீன வார்டு அமைக்கும் பணி விறுவிறு - மருத்துவ அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!