India

ஆப்கனில் உட்புகுந்த தாலிபன்கள்; இந்தியாவில் கிடுகிடுவென உயர்ந்த பாதாம், பிஸ்தாக்களின் விலை.. காரணம் என்ன?

அமெரிக்கா தனது படையை திரும்பப்பெற்றதை அடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டை 20 ஆண்டுகளுக்கு பிறகு தாலிபன்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

அதிபராக இருந்த அஷ்ரப் கனி முதல் ஆளாக தாலிபன்களுக்கு பயந்து ஆப்கனில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் அந்நாட்டு குடிமக்களும் பிற நாட்டினரும் எப்படியாவது ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தாலிபன்களின் ஆக்கிரமிப்பால் அண்டை மற்றும் பிற நாடுகளுடனான வர்த்தகம் உள்ளிட்ட ஆப்கனுடனான உறவுகள் முடங்கியதால் சர்வதேச அளவில் வணிக ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் இந்தியாவுடனான வர்த்தகமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆப்கானிஸ்தானுடனான தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாக இதுகாறும் இருந்து வந்தது டெல்லி. தற்போது தாலிபன்களின் படையெடுப்பால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி இறக்குமதிக்கான 2 பிரதான வழிகள் அடைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆப்கனில் இருந்து இறக்குமதியாகும் பழங்கள், காய்கறி சாறுகள், உலர் பழங்களின் வரத்து குறைந்துள்ளது என ஏற்றுமதி சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இறக்குமதியாகும் பொருட்களின் வரத்து குறைந்ததால் டெல்லியில் உலர் பழங்கள், பாதாம் போன்றவற்றின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது.

ஏற்கெனவே ரூ.500 க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ பாதம் ரூ.1000க்கு விற்கப்படுகிறது. பிஸ்தா, அத்தி போன்றவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

முன்னதாக கடந்த நிதியாண்டின் போது ரூ.6136 கோடிக்கு ஏற்றுமதியும், ரூ.3786 கோடிக்கு இறக்குமதி வர்த்தகமும் இந்தியா ஆப்கானிஸ்தானுடன் நடைபெற்றதாக தரவுகள் தெரிவிக்கப்படுகின்றன.

Also Read: தாலிபன் மாடலை கையில் எடுக்கிறதா பா.ஜ.க? திரிபுரா BJP எம்.எல்.ஏவின் பேச்சால் எழுந்த சர்ச்சை!