India

ஆன்லைன் வகுப்பை கவனிக்காததால் 4 வயது மகனை கொன்ற தாய்... தானும் தூக்கிட்டு தற்கொலை.. பகீர் சம்பவம்!

ஆன்லைனில் பாடம் படிக்காததால் பெற்ற தாயே 4 வயது மகனை கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், நவி மும்பை ஐரோலியில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற கட்டாயப்படுத்திய தனது தாயை, அவரது 15 வயது மகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஆன்லைனில் பாடம் படிக்காத மகனை தாயே கொன்ற நிகழ்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பாத்தார்டி பாட்டா பகுதியில் உள்ள சாய் சித்தி அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருபவர் சாகர் பாட்டக். இவரது மனைவி 23 வயதான சிக்கா. இவர்களது மகன் 4 வயதான ரிதான் மழலையர் பள்ளியில் படித்து வந்தான்.

இந்நிலையில், சிறுவன் ரிதான் ஆன்லைன் பாடத்தை கவனிக்காமல் விளையாட்டுத்தனமாக இருந்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த, சிறுவனின் தாய் சிக்கா அங்கிருந்த தலையணையால் சிறுவன் ரிதானின் முகத்தில் வைத்து அழுத்தியுள்ளார். இதனால், சிறுவன் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் உயிரிழந்தான்.

இதைக் கண்டு, அதிர்ச்சியடைந்த தாய் சிக்கா தனது உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் பாடத்தை கவனிக்காததற்காக பெற்ற மகனை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மேட்ரிமோனி மூலம் மோசடி... நகை பணத்தை அபேஸ் செய்த பெண்... கையும் களவுமாகப் பிடித்த திண்டுக்கல் இளைஞர்!