India

“2 டோஸ் தடுப்பூசி போட்டும் 40,000 பேருக்கு கொரோனா தொற்று” - கேரள அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கேரளாவில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து மக்கள் வெளி மாநிலங்களுக்குச் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பொது இடங்களுக்கு செல்பவர்கள் குறைந்தபட்சம் இரண்டு வாரத்துக்கு முன், முதல் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரள மாநில சுகாதாரத்துறை உயரதிகாரி ஒருவர், “இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுமார் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பத்தனம்திட்டாவில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு முதல் டோஸ் தடுப்பூசி போட்ட பின்னரும் 14,974 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்ட 5,042 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசி மற்றும் ஏற்கனவே நோய் தொற்றால் உண்டாகியிருக்கும் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை மீறி வைரஸ் பாதிப்பது கவலைக்குரிய விஷயம்.” எனத் தெரிவித்துள்ளார்.