India

நரபலி கொடுக்கப்பட்ட 5 வயது பெண் குழந்தை : அசாமில் ‘பகீர்’ சம்பவம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

அசாம் மாநிலத்தில், 5 வயது பெண் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அசாம் மாநிலம் சாரீடியோ மாவட்டத்தில் 5 வயது பெண் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சாமியார் ஒருவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

தேயிலை தோட்டத்தில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தை அடையாளம் தெரியாத நபர்களால் கடந்த 9ம் தேதி இரவு கடத்தப்பட்டது.

தனது தங்கையை காணவில்லை என அக்குழந்தையின் மூத்த சகோதரி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். பின்னர் குழந்தையின் சடலம் ஆற்றங்கரை அருகே மீட்கப்பட்டது.

இதுகுறித்து போலிஸார் கூறுகையில், “குழந்தையின் உடல் நேற்று இரவு சிங்லு ஆற்றங்கரை அருகே மீட்கப்பட்டது. சிவப்பு துணி, சாம்பல் உள்ளிட்ட தாந்திரீகம் செய்யும்போது பயன்படுத்தப்படும் பொருள்கள் அங்கு கண்டெடுக்கப்பட்டன.

எனவே, குழந்தை நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என கருதுகிறோம். குழந்தையின் உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையின் அப்பா உட்பட 10 பேரை விசாரணைக்காக அழைத்து வந்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

பழங்குடியினர் அதிகம் வாழும் தேயிலை தோட்டங்களில் இம்மாதிரியான நரபலி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இரண்டு தடுப்பூசிகளையும் கலந்து பயன்படுத்தினால் கூடுதல் பலன்... விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது?