India

"IITயில் சாதிய பாகுபாடுகளை தவிர்க்க ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?" : டி.ஆர்.பாலு MP கேள்வி!

சென்னை ஐ.ஐ.டியில் மர்மான முறையில் மாணவர்கள் தற்கொலை சம்பவங்களும், சாதிய பாகுபாடுகள் இருப்பதாகத் தொடர்ந்து சர்ச்சை எழுந்து வருகிறது. இதனால் கல்வியின் தரம் பாதிக்கப்படுவதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கல்வியாளர்களும், கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டியில் சாதி, மத ரீதியான பாகுபாடு நிலவுவதாக, நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு, “சென்னை ஐ.ஐ.டியில் மாணவர்களின் மன நலனை உறுதி செய்ய 24 மணி நேரமும் உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது” என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐ.ஐ.டி) சென்னை விடுதியில் 2019 ஆம் ஆண்டில் பாத்திமாவின் தற்கொலையைத் தொடர்ந்து, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே நிலவி வரும் சாதி மத வேறுபாடுகளினால் உயர்கல்வியின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதைத் தடுக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகள் தொடரும் நிலையில், துணைப் பேராசிரியர்கள் பதவி விலகி வருவதைத் தடுக்க ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா? என்று விரிவான கேள்வியை எழுப்பினார்.

இதற்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், சென்னையில் சாதி மத வேறுபாடுகளைக் களைய அது சார்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதிய மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் மனநிலையைச் சீர்செய்ய தேவையான மனநல மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தொழில்நுட்ப நிறுவனங்கள் சட்டம், 1961-ன்படி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே எந்த சாதி மத வேறுபாடுகளும் பின்பற்றப்படுவதில்லை” எனப் பதிலளித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “கொரோனா 3வது அலையை தடுக்க மாநிலங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுங்கள்” : தினகரன் தலையங்கம்