India

கொரோனாவின் கோர முகத்தை உலகறியச் செய்தவர்... மோதலை படம்பிடிக்கச் சென்றபோது கொலை!

இந்தியாவில் நிலவிய கொரோனாவின் கோர முகத்தை புகைப்படங்கள் மூலமாக உலகறியச் செய்த ராய்ட்டர்ஸ் புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக் கொல்லப்பட்டுள்ளார்.

‘புலிட்சர் விருது’ பெற்ற புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக் ஆப்கானிஸ்தான் கந்தகாரில் தாலிபான் மற்றும் ஆப்கான் படைகளுக்கு இடையே நிலவி வரும் மோதலை படம்பிடிக்கச் சென்றபோது கொல்லப்பட்டுள்ளார்.

டெல்லி வன்முறை, போராட்டங்களில் துப்பாக்கிச்சூடு, ரோஹிங்கியா நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பதற்றமான சூழல்களை தனது புகைப்படத்தின் மூலம் மக்களுக்கு உணர்த்தியவர் தானிஷ் சித்திக்.

இந்தியாவில் கொரோனா தொற்றும், மரணமும் கட்டுக்கடங்காமல் அதிகரித்தபோது, கங்கை நதிக்கு அருகே கொரோனாவால் மரணமடைந்தவர்களின் சடலங்கள் எரிக்கப்படுவதையும், ஆம்புலன்ஸ்களில் ஆக்சிஜன் மாஸ்க்கோடு நோயாளிகள் காத்திருப்பதையும் தானிஷ் சித்திக் புகைப்படம் எடுத்தார். அந்தப் புகைப்படங்கள் உலகையே உலுக்கின.

இந்நிலையில்தான், ஆப்கான் படையினரோடு இணைந்து தகவல் சேகரிக்கச் சென்ற தானிஷ் சித்திக், அங்கு நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டுள்ளார்.

சமீபத்தில் இவர் சென்ற வாகனம் தாக்கப்பட்டபோது அதிர்ஷ்டவசமாக தப்பிய தானிஷ், அதுகுறித்த வீடியோக்களையும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது மரணம் குறித்த தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரை ‘தற்காப்புக்காக’ கொலை செய்த இளம்பெண்... விடுதலை செய்த எஸ்.பி!