India

ஊரடங்கை மீறி மது விருந்து - சூதாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க MLA உட்பட 25 பேர் கைது: குஜராத்தில் நடந்த அவலம்!

நாடு முழுவதும் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்குவதும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. அதிலும் குறிப்பாகச் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களே இப்படியான நடவடிக்கையில் சிக்கி வருகிறார்கள்.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சொகுசு விடுதியில் மது விருந்து மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள ஒரு கொகுசு விடுதியில் சட்டவிரோதமாகச் சூதாட்டம் மற்றும் மது விருந்து நடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த விடுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் கேசரிசின் சோலங்கி உள்ளிட்ட 25 பேர் சட்டவிரோதமாக சூதாட்டம் மற்றும் மது விருந்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் விடுதியில் இருந்த ஆறு வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் சூதாட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர், பா.ஜ.கவை சேர்ந்த மாடர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கேசரிசின் சோலங்கி உள்ளிட்ட 25 பேரையும் போலிஸார் கைது செய்தனர். மேலும் விடுதியிலிருந்த எட்டு கொகுசு வாகனங்களை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “ஏழை எளிய மக்கள் சமையல் எரிவாயுவை பயன்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?” : ‘தினகரன்’ ஏடு கேள்வி!