India
“கல்விக் கட்டணம் செலுத்த முடியாவிட்டால் எதற்கு உயிரோடு இருக்கிறீர்கள்?” : பா.ஜ.க அமைச்சர் சர்ச்சை பேச்சு!
பெட்ரோல் விலை அதிகம் என்று கூறுபவர்கள் சைக்கிளில் செல்லுங்கள் என்று மத்திய பிரதேச பா.ஜ.க அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத பெற்றோர்கள் செத்துப் போய் விடுங்கள் என்று மற்றொரு பா.ஜ.க அமைச்சர் திமிராகப் பேசியுள்ளார்.
கொரோனா காரணமாக பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடந்து வருகின்றன. எனினும் கல்விக் கட்டண வசூலில் சமரசம் செய்யாத தனியார் கல்வி நிறுவனங்கள், எப்போதும்போல கறாராக தங்களின் வசூலை நடத்திக்கொண்டிருக்கின்றன.
பயிற்சிக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவிட்டாலும், நன்கொடை என்ற பெயரில் பல ஆயிரங்களை கட்டணமாக தனியார் பள்ளிகள் வசூலித்து வருகின்றன. அதிலும், பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேசத்தில் நிலைமை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மரை, பெற்றோர்கள் நேரில் சந்தித்து முறையிட்டுள்ளனர். பள்ளிக் கல்விக் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் அதை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதே நிலைமை நீடித்தால், நாங்கள் செத்து மடிவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் ஆவேசப்பட்டுள்ளனர்.
தங்களின் குறைகளைக் கேட்டு அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். ஆனால், அனைத்தையும் கேட்டுக்கொண்ட பா.ஜ.க அமைச்சர், “கல்விக் கட்டணம் செலுத்த முடியாவிட்டால் எதற்கு உயிரோடு இருக்கிறீர்கள்... செத்துப் போய் விடுங்கள்” என்று கூறி, பொதுமக்களை அவமானப்படுத்தியுள்ளார். உடனடியாக அந்த இடத்தை விட்டும் காலி செய்துள்ளார்.
அமைச்சரின் எதிர்பாராத இந்த வார்த்தையால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சுமார் 80 பேர், அமைச்சரின் அலுவலகத்திற்கு முன்பாகவே போராட்டம் நடத்தியுள்ளனர். அமைச்சர் இந்தர் சிங் பர்மரின் பேச்சு அடங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், பல்வேறு தரப்பினரும் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் அங்கு எழுந்துள்ளது.
Also Read
-
நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் தொடரும் போராட்டம்.. ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி.. கடும் தள்ளுமுள்ளு!
-
தர்மேந்திர பிரதான் ராஜினாமா.. முடிவுக்கு வந்த போராட்டம்.. அடிபணிந்த ஒன்றிய பாஜக அரசு.. வரலாற்று நிகழ்வு!
-
“மேகதாது விவகாரம்.. விஷப் பரீட்சை வேண்டாம்” : தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“நான் விஜய் Fan..” : மாணவர்கள் போராட்டத்தில் பேச்சு.. மூக்குடைபட்டு திரும்பிய சனம் செட்டி - என்ன நடந்தது?
-
தி.மு.க எப்போதும் உங்கள் பக்கமே நிற்கும் : சென்னையில் நடைபெறும் நீட் போராட்டத்தில் கனிமொழி எம்.பி பேச்சு!