India

"பெட்ரோல் விலை உயர்வில் 'சதி'”: ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பீகார் நபர்!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு 100 ரூபாயை கடந்திருப்பது சாமானிய மக்களை மேலும் துயரமடையச் செய்துள்ளது.

மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும், வேளாண் இடுபொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த 54 நாட்களில் மட்டும் ஒன்றிய அரசு 30 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இது மேலும் 125 ரூபாய் வரை அதிகரிக்கும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "பெட்ரோல் விலை உயர்வு மக்களுக்கு சுமையாக இருக்கிறது என்பது ஒன்றிய அரசுக்குத் தெரிகிறது. ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை" என தெரிவித்திருந்தார். இவரது இந்தப் பேச்சு மக்கள் மீது ஒன்றிய அரசுக்குக் கொஞ்சம் கூட அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது.

இந்நிலையில், பீகாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தமன்னா ஹாஷ்மி என்பர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு தொடர்பாக பீகார் நீதிமன்றத்தில், ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது வழக்கு தொடுத்துள்ளார்.

முசாபர்பூரில் உள்ள தலைமை நீதித்துறை நீதிமன்றத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்துள்ள தமன்னா ஹாஷ்மி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவதில் "சதி" நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். அதே நேரத்தில் கச்சா எண்ணெயின் விலை மிகவும் குறைவாக உள்ளது என்பதை குறிப்பிட்ட அவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாட்டு மக்களை பயமுறுத்துகிறது மற்றும் கோபமடையச் செய்கிறது என தெரிவித்தார். மேலும் இந்த மனு உரிய நேரத்தில் விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

சமூக ஆர்வலர் தமன்னா ஹாஷ்மி ஏற்கனவே பாபா ராம்தேவ் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஒன்றிய அரசின் கடன் ரூ.116 லட்சம் கோடியாக அதிகரிப்பு : இந்தியா பொருளாதாரத்தை மோடி வளர்த்த லட்சணம் இதுதானா?