India

“போலி சேர்க்கை.. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, காலணி வழங்கியதில் மெகா ஊழல்”: சிக்கிய உ.பி அரசு!

பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில், ராமர் கோயிலுக்கான நிதி துவங்கி, பசுக்களுக்கு சரணாலயம் நடத்துவதற்கான நிதி வரை அனைத்திலும் ஊழல் புரையோடிப் போயிருக்கிறது.

அந்த வகையில், புதிதாக - போலியான மாணவர் சேர்க்கையைக் காட்டி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை, காலணி வழங்குவதற்கான நிதியிலும் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

தலைநகர் லக்னோவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அப்போது, மாணவர்களின் ஆதார் அட்டையை சரி பார்த்தபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

வழக்கமாக, உத்தர பிரதேச அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் குறைவு என்பதால் சேர்க்கைக்கு என உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. இதனைச் சாக்காக வைத்து, பெரும்பாலான பள்ளிகளில் போலியாக மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச பள்ளி மாணவர்களுக்கு சீருடை, குளிருடை, காலுறை மற்றும் காலணி, புத்தகப் பை என ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1200 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்கான நிதி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களாலேயே நிர்வகிக்கப்படுகின்றன.

இந்நிலையில்தான் போலியாக மாணவர் சேர்க்கையைக் காட்டி நிதிமுறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஊழல் தெரியவந்த பின்னர், உத்தர பிரதேச தொடக்கப்பள்ளிகள் இணையதளத்தில், லக்னோ மாவட்டத்தில் மட்டும் 22.95 லட்சமாக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 15.8 லட்சம் என ஒரேயடியாக 7 லட்சம் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.

இந்த எல்லைக்கு உட்பட்ட குறிப்பிட்ட இரண்டு பள்ளிகளில் மட்டும் 4,000 போலி மாணவர் சேர்க்கைகள் நடைபெற்றிருப்பது முதற்கட்டமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பல பள்ளிகளில் போலி மாணவர் சேர்க்கை சில ஆயிரங்களாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

Also Read: ATM கொள்ளை.. இருவர் கைது.. “30 பேர் சேர்ந்து கொள்ளையடிப்போம்” - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!