India

“இணையத்தை அணுக முடியாதவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும்”: ஒன்றிய அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரி அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாநில அரசுகள் வேக வேகமாக மக்களுக்குத் தடுப்பூசிகளை செலுத்தி வருகிறார்கள்.

ஆனால், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தடுப்பூசிகளை , நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப கொள்முதல் செய்யாததால் தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசிகள் அனைத்தும் இலவசமாகவே வழங்க வேண்டும் என மாநில அரசுகள் வலியுறுத்தின.

இதனால், 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் பேசும் போது பிரதமர் மோடி அறிவித்தார். இது காலதாமதமான முடிவு என்றும் பல மாநில முதல்வர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

மேலும் தடுப்பூசிகள் குறித்த அளவை மாநில அரசுகள் பொதுமக்களிடம் தெரிவிக்கக் கூடாது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதற்கும் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்படி தடுப்பூசிகளைத் தொடர்ச்சியாக ஒன்றி அரசு தவறாகவே கையாண்டு வருகிறது.

இந்நிலையில், நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவரின் ட்விட்டரில், "நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும். தடுப்பூசிக்காக ஆன்லைனில் பதிவு செய்வது மட்டும் போதாது.

தடுப்பூசி மையத்துக்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும். இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள கோவின் இணையப் பதிவைக் கட்டாயமாக்கக் கூடாது" என பதிவிட்டுள்ளார்.

Also Read: "தடுப்பூசி தயாரிப்பதற்கு ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" : டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு!