India
விவசாயிகளுக்கு எதிரான ஒன்றிய அரசு.. 4 ஆண்டுகளில் போராட்டங்கள் 5 மடங்கு அதிகரிப்பு.. CSE தகவல்!
மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஆறு மாதங்களாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடி வரும் நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் விவசாயிகள் போராட்டம் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.
அதாவது 2017ம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டு வரை நாடு முழுவதும் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளுக்காக ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் 2017ம் ஆண்டு 15 மாநிலங்களில் 34 பெரிய அளவிலான போராட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளன. ஆனால், 2021ஆம் ஆண்டு 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 165 போராட்டங்கள் நடைபெற்றுள்ளதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.
அதிலும், ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களைக் கண்டித்து நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் 11 போராட்டங்கள் கடந்த ஆண்டு நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசுகள் வேளாண்துறைக்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி இந்திய அளவில் 96 போராட்டங்கள் பெரிய அளவில் நடைபெற்றுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோல், விளைபொருட்களுக்கு நியாயமான விலையை நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும், நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலைய விரிவாக்கத்திற்காக விளை நிலங்களை கையகப்படுத்தியதற்கு எதிராகவும் நாடு முழுவதும் விவசாயிகள் பரவலாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், ஒடிசா, ஆந்திரா,தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றுள்ளது என்றும், நாடு முழுவதும் தினந்தோறும் 28க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து வருவதாகவும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.
Also Read
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’