India

அலட்சியத்தால் மக்களின் உயிரை பணயம் வைத்த பா.ஜ.க.. கும்பமேளாவால் ஒரே மாதத்தில் 1.3 லட்சம் பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதாலும், ஆக்சிஜன் தட்டுப்பாட்டாலும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவித்தபோதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதில், பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் சுகாதார கட்டமைப்பே முழுமையாகத் திணறியுள்ளது. இதனால் இம்மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரகாண்டில் நடைபெற்ற கும்பமேளாவில் கூடிய கூட்டத்தால் ஒரே மாதத்தில் 1.3 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஏப்ரல் 12 முதல் 14 வரை நடைபெற்ற கும்பமேளாவில் லட்சக்கணக்கான பேர் கூடியதால், தற்போது இம்மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிரடியாக உயர்ந்துள்ளது. மார் 31 முதல் ஏப்ரல் 24 வரை 1800 சதவீதம் வரை கொரோனா எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

மேலும் 1,713 பேர் கொரோனா தொற்றல் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு தொற்று பரவலின்போது 600க்கும் குறைவாகவே கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை 151 பேரும், வெள்ளிக்கிழமை 137 பேரும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா இறப்பு விகிதம் 24 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கரிமா தசவுனி கூறுகையில், மக்களின் உயிரைப் பணயம் வைத்துள்ளது உத்தரகாண்ட் அரசு. கொரோனா பரவல் அதிகரிப்பதற்கு கும்பமேளாவே காரணம். மேலும் கொரோனா குறித்து முதல்வர் தவறாக புரிந்துகொண்டுள்ளார். முதல்வராகப் பொறுப்பேற்றதில் இருந்தே ஹரித்வாருக்கு வருபவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்காததால் தான் தற்போது இந்த நிலைக்கு உத்தரகாண்ட் வந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: பசுக்களை காத்து மக்களை கைவிட்ட யோகி அரசு: கொரோனாவுக்கு 11 எம்.எல்.ஏக்கள் பலி ; உ.பியில் தொடரும் அவலம்!