India

“காயத்ரி மந்திரம் கொரோனா தொற்றை குணப்படுத்துமா?” : ஆய்வுக்கு நிதி ஒதுக்கிய மோடி - அதிர்ச்சியில் மக்கள்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதிலிருந்து மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பற்ற முறையிலேயே நடந்து கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் முதல் அலையின் போது திடீரென முழு ஊரடங்கை அறிவித்ததால், மக்கள் அரசின் உதவியின்றி வறுமையால் தவித்தனர்.

மோடி அரசின் ஊரடங்கால் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை இழந்து வீதியில் நிற்கின்றனர். மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியதற்கு இஸ்லாமியர்களை குற்றம்சாட்டி, மத அரசியலை முன்னெடுத்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக உலக நாடுகள் முழுவதும் தடுப்பூசிகள் கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் போது, பா.ஜ.கவை சேர்ந்த அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை மாட்டுச் சாணம், கோமியம் குடித்தால் கொரோனா குணமடைந்துவிடும் என பிரச்சாரம் செய்து வந்தனர். இவர்களின் பேச்சை நம்பி சிலர் அவற்றைச் சாப்பிட்டு உயிரிழந்த அவலமும் அரங்கேறியது.

தொடர்ச்சியாக பா.ஜ.கவினர் அறிவியலுக்கு புறம்பாகவே கொரோனா வைரஸை கையாண்டு வருகின்றனர். மேலும் காயத்ரி மந்திரம் உச்சரித்தால், யோகா செய்தால் கொரோனா முற்றிலும் குணமடைந்துவிடும் என தொடர்ந்து பா.ஜ.கவினர் பேசி வருகிறனர்.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து வரும் நிலையில், காயத்ரி மந்திரம் உச்சரித்தால் கொரோனாவில் இருந்து குணமடைவார்களா என்பது குறித்து ஆய்வு நடத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு காயத்ரி மந்திரங்கள் உச்சரிக்க வைப்பது, யோகா பயிற்சி அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் காயத்ரி மந்திரம் உச்சரிப்பது, உடலில் எதிர்ப்புச் சக்திகளை அதிகரிக்கச் செய்கிறதா? கொரோனா நோயாளிகளை விரைவாகக் குணப்படுத்துகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது. இதற்கான நிதியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் இதற்கு அனுமதி கோரி ஐசிஎம்ஆர் அமைப்பிடம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read: “பிரதமரின் சைக்கோ அதிகாரிகளால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது” - சுப்பிரமணியன் சுவாமி காட்டம்!