India

தாய் இறந்தது தெரியாமல் பசியால் அழுத குழந்தை; கொரோனா அச்சத்தால் உதவி செய்ய முன்வராத பொதுமக்கள்!

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள பிம்ப்ரி சின்சிவாடா பகுதியில் ஒரு வீட்டில் துர்நாற்றம் வீதியுள்ளது. இது குறித்து போலிஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து, வீட்டிற்குள் நுழைந்தபோது, இறந்த நிலையில் பெண்ணின் சடலம் இருந்துள்ளது. மேலும் சடலம் அருகே 18 மாத குழந்தை ஒன்றும் அழுதநிலையில் இருந்ததை பார்த்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

கொரானா தொற்றால் அப்பெண்மணி இறந்திருக்கக் கூடும் என அச்சமடைந்த அப்பகுதி மக்கள் யாரும், பசியால் அழுது கொண்டிருந்த குழைத்தைக்கு உணவளிக்க முன்வராதபோது, பெண் போலிஸார் சுஷிலா கபாலே, ரேகா வேஸ் ஆகியோர் பால் மற்றும் பிஸ்கட் கொடுத்தனர்.

பின்னர், போலிஸார் குழந்தையை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தைக்கு லேசான காய்ச்சல் இருந்ததால்,கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் போலிஸார் குழந்தையை அரசு பராமரிப்பு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்து போலிஸார் கூறுகையில், "அந்த பெண்மணி கடந்த சனிக்கிழமை இறந்திருக்க கூடும். இரண்டு நாட்களாக குழந்தை உணவு இல்லாமல் தவித்து வந்துள்ளது. தற்போது லேசான காய்ச்சலுடன் குழந்தை நன்றாக உள்ளது. உத்திர பிரதேசத்திற்கு வேலைக்காகச் சென்றுள்ள பெண்ணின் கணவருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளனர்.

Also Read: மனைவி நகையை விற்று ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றிய ம.பி. இளைஞர்; நெருக்கடி காலத்தில் உதித்த நிஜ ஹீரொ!