India

“அறைந்துவிடுவேன்” - உயிருக்கு போராடும் தாய்க்கு ஆக்சிஜன் கேட்டவரை மிரட்டிய பா.ஜ.க அமைச்சர்!

தன் தாயின் உயிரைக் காப்பாற்ற ஆக்சிஜன் கேட்டுக் கதறியவரிடம், ‘கன்னத்தில் அறைந்துவிடுவேன்’ என்று பா.ஜ.க அமைச்சர் மிரட்டியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் ஆக்ஸிஜன், வெண்ட்டிலேட்டர் வசதி உள்ளிட்டவற்றிற்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. மத்திய பிரதேசத்திலும் மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்தில் பா.ஜ.க எம்.பி-யாக இருப்பவர் பிரஹலாத் படேல். இவர், மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் தாமோ மாவட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் பா.ஜ.க அமைச்சர் பிரஹலாத் படேல் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது, அமைச்சரை அணுகிய சிலர், தங்கள் உறவினர்களுக்கு ஆக்சிஜன் சிலண்டர் அளித்து உதவும்படி கோரிக்கை விடுத்தனர்.

அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர், தன் தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு ஆக்சிஜன் வழங்க மருத்துவமனை நிர்வாகம் மறுப்பதாகவும் தெரிவித்தார்.

ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கி தன் தாயின் உயிரைக் காப்பாற்றும்படி, அமைச்சர் முன் கண்ணீர்விட்டு கதறினர். அப்போது அமைச்சர் பிரஹலாத் படேல் “இப்படியே பேசிக் கொண்டிருந்தால், கன்னத்தில் இரண்டு அறை விடுவேன்” என ஆத்திரமாகப் பேசியுள்ளார்.

தன் தாயின் உயிருக்கு ஆக்சிஜன் கேட்ட நபரை அறைவேன் என மத்திய அமைச்சர் கூறியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் இந்தப் பேச்சு சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

Also Read: “நடைபாதையில் படுத்து கிடந்த கொரோனா நோயாளிகள்” : பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தொடரும் அவலம்!