India

“கெஞ்சியோ, பிச்சை எடுத்தோ, திருடியோ ஆக்சிஜன் வழங்க வேண்டும்” : மோடி அரசை வெளுத்து வாங்கிய டெல்லி ஐகோர்ட்!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, முன்பை விட வேகமாக பரவிவரும் நிலையில், நாட்டிலுள்ள மருத்துவமனைகள் பலவும் நிரம்பி வழியத் துவங்கியுள்ளன. நோயாளிகளுக்குத் தேவையான படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அவசரமாக ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனை டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியதை தொடர்ந்து இரவில் அவசரமாக வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.இதனையடுத்து ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் ரேகா பள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேட்டன் சர்மாஆஜராகி வாதாடிய இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறியிருப்பதாவது, “ மனித உயிர்கள் தற்போது ஆபத்தில் உள்ளது. 130 கோடி மக்கட் தொகையைக் கொண்ட இந்த நாட்டில் இரண்டு கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தகவல் கூறுகிறது. உண்மையான பாதிப்பு இதைவிட 5 மடங்கு இருந்தாலும், 10 கோடி பேருக்குத்தான் கொரோனா இருக்கும்.

எனவே மிச்சமிருக்கும் மற்றவர்களைக் காப்பாற்ற விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதே வேகத்தில் போனால், ஒரு கோடி பேரைக் கூட நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம். நீதிபதிகளாகிய நாங்கள் ஒரு அரசை நடத்த இங்கு வரவில்லை. ஆனால் தற்போதுள்ள நிலைமையின் தீவிர தன்மையை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்று கருதுகிறோம்.

கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நோயாளிகளுக்கு வழங்கும் ஆக்சிஜன் அளவை குறைத்திருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், ஏப்ரல் 22-ம் தேதிக்குப் பிறகே, தொழிற்சாலைகள் ஆக்சிஜனை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏப்ரல் 22-ம் தேதி வரை எதற்காகக் காத்திருக்க வேண்டும். அதுவரை மக்களின் உயிர் ஆபத்தில் இருக்க வேண்டுமா, என்ன?

நேற்றே உத்தரவிட்டும் மத்திய அரசு எதுவும் செய்யாதது அதிர்ச்சி அளிக்கிறது. மனித உயிர்கள் அரசுக்கு முக்கியமில்லையா? இன்று 22 பேர் ஆக்சிஜன் கிடைக்காமல் பலியாகி இருக்கிறார்கள். என்ன செய்வீர்களோ தெரியாது. தொழிற்சாலைகளிடம் கெஞ்சியோ, பிச்சை எடுத்தோ, திருடியோ ஆக்சிஜன் வழங்க வேண்டும். ஆக்சிஜன் தரமறுக்கும் தொழிற்சாலையை கையகப்படுத்துங்கள்.

மக்களின் வாழ்க்கையை விடப் பொருளாதார நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது. தொழிற்சாலைகள் காத்திருக்கலாம். ஆனால் கொரோனா நோயாளிகள் காத்திருக்க முடியாது. போதுமான அளவில் மருந்துகள் இருந்தும், சரியான நேரத்தில் தேவையான இடங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்று சேரவில்லை என்றால், ஆட்சியாளர்களின் கைகளில் ரத்தக் கறை படியும் என் பதை மறந்து விடாதீர்கள். இவ்வாறு நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அப்போது மத்திய அரசின் சோலிசிட்டர், மத்திய அரசிடமிருந்து தனக்கு போதிய தகவல் இல்லை. எனவே வழக்கை நாளை ஒத்திவைக்க வேண்டும் என்றார். அதற்கு நீதிபதிகள், இரவில் ஏதாவது நடந்தால் யார் பொறுப்பேற்பது? என்று கேள்வி எழுப்பினர். பின்னர், மத்திய அரசு டெல்லிக்கு திருப்பிவிட்ட ஆக்சிஜன் லாரிகளை போலிஸ் பாதுகாப்புடன் அவசரமாக மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்ப்பதாக மத்திய அரசு உறுதியளித்து. இதனைத் தொடர்ந்து, வழக்கை நீதிபதிகள் நாளை பிற்பகல் மணிக்குக்கு ஒத்திவைத்தனர்.

Also Read: சீத்தாராம் யெச்சூரியின் மகன் அஷிஸ் யெச்சூரி கொரோனாவால் உயிரிழப்பு : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!