India

பள்ளி மாணவனைக் குத்திக் கொலை செய்த இந்துத்வா கும்பல்... கேரளாவில் தொடரும் அரசியல் படுகொலைகள்!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிமன்யூ. 15 வயதாகும் அபிமன்யூ அருகில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது குடும்ப உறுப்பினர்கள் சி.பி.ஐ(எம்) கட்சி உறுப்பினர்கள் என்பதால், அபிமன்யூவும் இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தில் இருந்துள்ளார்.

படிப்பு நேரம் போக மீதமுள்ள நேரத்தில் அரசியல் நடவடிக்கையில் அபிமன்யூ ஈடுபட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தவகையில் தனது அண்ணனுடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட போது ஆர்.எஸ்.எஸ் கும்பலைச் சேர்ந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிந்துள்ளது.

இந்நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள கோவில் திருவிழா ஒன்றில் கலந்துகொண்டு நண்பர்களுடன் சுற்றி திரிந்துள்ளார் அபிமன்யூ. அப்போது அபிமன்யூவை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது.

அந்த நேரத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அபிமன்யூவின் வயிற்றுப்பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதை பார்த்ததும் அதிர்ச்சியான அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவம் குறித்து ஆலப்புழா போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

பலத்த காயம் அடைந்த அபிமன்யூ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அபிமன்யூவுடன் இருந்த நண்பர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்த விரைந்து வந்த போலிஸார் அபிமன்யூவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிறுவனின் கொலையில் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக சி.பி.ஐ(எம்) கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “தந்தைக்கு உயிர் கொடுக்க தற்கொலை செய்து கொண்ட மகள்”: சென்னையில் நடந்த சோகம் - உருக்கமான கடிதம் சிக்கியது!