India

“ரூ.9 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்” : மோடி ஆட்சியில் தொடர் பின்னடைவை சந்திக்கும் பங்குச்சந்தைகள்!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நாட்டில் பல மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்துறைகள் முடங்கிக் கிடக்கின்றன. இதன் காரணமாக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இது இன்னும் தீவிரமடையலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இதனால், பங்குச்சந்தைகளில் முதலீடு செய்பவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த பாதிப்பு இந்திய பங்குச்சந்தையிலும் பெரிதாக எதிரொலித்து வருகிறது. இந்திய பங்குச் சந்தைகள் கடந்த சில வாரங்களாகவே அடி வாங்கி வருகின்றன. நாளுக்கு நாள் வீழ்ச்சி அதிகரித்துக்கொண்டு போகிறதே தவிர, நின்றபாடில்லை.

அந்த வகையில், நேற்று மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ், தேசியப் பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டுமே பலத்த அடி வாங்கியுள்ளன. குறிப்பாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 3.44 சதவீதம் சரிந்து 47,883.38 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 3.53 சதவீதம் சரிந்து 14,310.80 ஆகவும் இருந்தது.

இதன்விளைவாக முதலீட்டாளர்கள் சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளனர். வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை மதிப்பு 2,09,63,241.87 கோடியில் இருந்து 8,77,435.50 கோடி சரிந்து 2,00,85,806.37 கோடியாகி விட்டது. நிதி மற்றும் உலோகம் சார்ந்த பங்குகள் அதிக இழப்பைச் சந்தித்தன.

Also Read: உ.பி.,யில் ‘கோமா’ நிலைக்கு சென்ற சுகாதாரத்துறை : யோகி ஆதித்யநாத் மீது அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!