India

"மினி பாகிஸ்தான் எனப் பேசிய மோடிக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை" : தேர்தல் ஆணையத்துக்கு மம்தா கேள்வி!

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மூன்று கட்டங்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 4ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 3ம் தேதி ஹூக்ளியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், சிறுபான்மையினரின் வாக்குகளை பிரியவிடக்கூடாது என்கிற ரீதியில் மம்தா பானர்ஜி பேசினார். இதையடுத்து, மதவாத அடிப்படையில் மம்தா பானர்ஜி பேசியதாக பா.ஜ.க குற்றம்சாட்டியது.

இதனைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜியிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், நீங்கள் எத்தனை நோட்டீஸ் அனுப்பினாலும் என்னுடைய பதில் ஒரே மாதிரி தான் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் நரேந்திர மோடி மீது ஏன் புகாரில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறுகையில், "இந்து, முஸ்லிம் வாக்கு வங்கியைப் பற்றி தினந்தோறும் பேசிவரும் நரேந்திர மோடிக்கு எதிராக ஏன் எந்த புகாரும் இல்லை? நந்திகிராம் பிரச்சாரத்தின் போது மினி பாகிஸ்தான் என நரேந்திர மோடி பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு எதிராக எத்தனை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீங்கள் எனக்கு 10 நோட்டீஸ் அனுப்பினாலும் என்னுடைய பதில் ஒரே மாதிரி தான் இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: "நான் வங்கத்துப் பெண் புலி; குஜராத் குண்டர்களுக்கு ஒருபோதும் வளைந்துகொடுக்கமாட்டேன்” - மம்தா ஆவேசம்!