India

PM வீட்டுவசதி திட்டத்தில் 81 லட்சம் பேர் புறக்கணிப்பு - தேர்வானவர்களுக்கும் வீடு கிடைக்காத அவலம்?

பிரதமரின் ஊரக வீட்டு வசதி திட்டத்தின்கீழ் 2 கோடியே 95 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 81 லட்சம் பேர்கள் கழித்துக்கட்டப்பட்டுள்ளனர். அத்துடன் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் எண்ணிக்கையும் குறையலாம் என்று மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கு தகுதியானவர்களாக முதலில் 2 கோடியே 95 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பின்னர், அவர்களில் 81 லட்சம் பேருக்கு இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கு தகுதியில்லை என தெரியவந்ததை அடுத்து, அவர்களின் பெயர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இறுதியாக, இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு 2 கோடியே 14 லட்சம் பேர் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டு உள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கையும் குறைய வாய்ப்பு உள்ளதாக மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2016-17 முதல் 2018-19 வரையிலான கால கட்டத்தில், பிரதமர் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் முதற்கட்டத்தில், 1 கோடி வீடுகளைக் கட்டி முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்கில் 92 சதவிகிதமே எட்டப்பட்டது. தற்போது 2020-21 நிதியாண்டிலும் 90 சதவிகிதமே இலக்கு எட்டப்படும் நிலை உள்ளது. அடையாளம் காணப்பட்ட 2 கோடியே 14 லட்சம் பயனாளிகளில், 2020-21 நிதியாண்டில் 1 கோடியே 92 லட்சம் பயனாளிகளுக்கு மட்டுமே வீடுகளை கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் திட்டத்திற்காக 2020-21 நிதியாண்டிற்கு மத்திய அரசு ரூ.39 ஆயிரத்து 269 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இதுவரையிலான நிதி ஒதுக்கீட்டிலேயே இதுதான் அதிகபட்சம் என்றும் ஊரக மேம்பாட்டுத்துறை கூறியுள்ளது. ஆனால், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள ரூ.39 ஆயிரத்து 269 கோடியைக் காட்டிலும் அதிகமாக ரூ.46 ஆயிரத்து 661 கோடியை மாநிலங்கள் செலவிட்டாக வேண்டும் என்பது இங்கு குறிப்பிட வேண்டியதாகும்.

Also Read: இறந்தவர்கள் பெயரில் வீடு : பிரதமர் வீட்டுவசதி திட்டத்தில் அ.தி.மு.க அரசின் துணையோடு மாபெரும் மோசடி!