India

சேனல் மாற்றுவதில் கணவருடன் சண்டை... 3 வயது குழந்தையைக் கொன்ற தாய்... கர்நாடகாவில் கொடூரச் சம்பவம்!

கணவருடன் தொலைக்காட்சி பார்ப்பதில் ஏற்பட்ட சண்டையில், கணவருக்கு ஆதரவாக இருந்த 3 வயது குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மல்லத்தஹள்ளி பகுதியைச் சேர்ந்த சுதா (26) என்ற பெண், டைல்ஸ் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரது கணவர் ஈரண்ணா தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு வினுதா என்ற 3 வயது மகள் உள்ளார்.

நேற்று முன்தினம் 2 மணியளவில் ஈரண்ணா மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது அவருடைய மகள் வினுதா தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார். உடனே டிவியின் ரிமோட்டை எடுத்து சேனலை மாற்றிய ஈரண்ணா, செய்தி சேனல் வைத்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி, எந்நேரமும் செய்தி சேனல்களை பார்ப்பதா என கணவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். செய்தி சேனல்களை மட்டுமே பார்ப்பதாக இருந்தால் வீட்டுக்கே வரவேண்டாம் எனவும் கோபமாகப் பேசியுள்ளார்.

அப்போது 3 வயது குழந்தை வினுதா தந்தைக்கு ஆதரவாக தாயிடம் பேசியுள்ளார். “அப்பாவே டி.வி பார்க்கட்டும், அம்மாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது” என குழந்தை தெரிவித்ததால் கடும் கோபமடைந்த சுதா தன்னிலை மறந்து குழந்தையை கொலை செய்திருக்கிறார்.

பின்னர், எதுவும் அறியாதது போல ஜனபாரதி காவல்நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார். மல்லத்தஹள்ளி அருகே கடை ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது தனது மகள் தொலைந்து போனதாக அவர் புகார் கொடுத்துள்ளார்.

கட்டுமானப்பணி நிறைவடையாத கட்டிடம் ஒன்றில் குழந்தையின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், மகளை காணவில்லை என புகார் கொடுத்த பெற்றோரை வரவழைத்து விசாரித்த போது தனது குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார் சுதா.

தொலைக்காட்சி பார்ப்பதில் ஏற்பட்ட சண்டையில், பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “மோடி அரசால் மிகப்பெரிய பேரழிவை எதிர்நோக்கியிருக்கிறது இந்தியா” - ப.சிதம்பரம் எச்சரிக்கை!