India

புதுச்சேரியில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா... புறநோயாளிகள் சிகிச்சையை நிறுத்திய ஜிப்மர்!

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 237 பேருக்கு கொரோனா கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுமையாக இதுவரை 42 ஆயிரத்து 776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளதால், ஜிப்மர் மருத்துவமனை சில கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவமனை மூலம் நோய் பரவுவதை தடுக்கும் விதமாக 9ம் தேதியில் இருந்து, அனைத்து மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவுகளில் முன்பதிவு செய்து ஆலோசனைக்குப் பின்னரே வெளிப்புற நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படும்.

எனவே, வெளிப்புற சிகிச்சை பெற விரும்புவோர் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். அவசர சேவைகள் வழக்கம் போல எந்த முன்பதிவும் இன்றி தொடரும். hello JIPMER என்ற செயலி உதவியுடன் வெளிப்புற சேவைக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிப்மர் மருத்துவமனையின் இந்த முடிவு பெரிதாக சாமானிய மக்களைப் பாதிக்கும். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து அதிகமாக மக்கள் ஜிப்மர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இவர்களை இந்த முடிவு பாதிக்கக்கூடியாக இருக்கும். எனவே குறைந்த எண்ணிக்கையிலாவது புறநோளிகளுக்கு சிகிச்சைப் பார்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: ஒவ்வொரு நாளும் உக்கிரமடையும் கொரோனா: அடுத்த ஒரு மாதம் மிக முக்கியமானது - வார்னிங் மணி அடித்த மத்திய அரசு!