India

“திரிபுராவில் ஊழலைக் கேள்வி கேட்ட அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்” : பா.ஜ.க ஆட்சியின் நடந்த அராஜகம் !

திரிபுரா மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் அனிந்திதா பவுமிக். இவர் சமூக வலைத்தளங்களில் தீவிரமாகச் செயல்படக்கூடியவர்.

இந்நிலையில், கடந்த மார்ச் 24ம் தேதி அனிந்திதா பவுமிக் தனது முகநூலில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில், மருத்துவமனைக்காக வாங்கிய மருத்துவ உபகரணத்தை முறையாக டெண்டர் வெளியிட்டு வாங்காமல், முறைகேடாகத் தன்னிச்சையாகத் தனியாரிடம் இருந்து வாங்கியது குறித்து பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவை நீக்க வேண்டும் என அனிந்திதா பவுமிக்கிடம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், அவர் பதிவை நீக்க முடியாது என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருத்துவமனை நிர்வகாம் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இது குறித்து, அனிந்திதா பவுமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் எனது முகநூல் பதிவில் மருத்துவமனையைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. ஆனால், எனது பதிவை நீக்கச்சொல்லி மருத்துவமனை நிர்வாகம் நிர்ப்பந்தம் அளித்தது, எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. என்னை மிரட்டியதோடு, எனது தந்தையிடமும் இது குறித்துத் தெரிவித்து அவரை வைத்தே எனது பதிவை நீக்கவலியுறுத்தியது. ஆனாலும் நான் மறுத்து விட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “திரிபுராவில் கடந்த 2018 ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்தே கருத்துச் சுதந்திரத்திற்குத் தடை ஏற்பட்டுவிட்டது. தற்போதைய பா.ஜ.க ஆட்சியில் கருத்துச் சுதந்திரமே இல்லை. நாங்கள்தானே வாக்களித்தோம், பின்னர் ஏன் அவர்களை விமர்சிக்க முடியாது? எனது சமூக வலைத்தள பதிவுக்காக பணியிடை நீக்கம் செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: “தி.மு.கவின் வெற்றியை பா.ஜ.கவின் கோழைத்தனமான சோதனைகளால் தடுக்க முடியாது” : தீக்கதிர் தலையங்கம் உறுதி!