India

“இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிப்பு” : மோடி அரசின் லட்சியம் இதுதானா?

அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பியூ ரிசர்ச் அமைப்பு, கொரோனாவிற்கு பிறகு தற்போது, உலகம் முழுவதும் மக்கள் சந்திக்கும் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் வறுமை நிலை குறித்து கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், இந்தியாவில் முழு ஊரடங்கு காலத்தில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. பலர் வேலையிழந்தனர். தனிநபர் வருமானம் சரிந்தது. அதனால், 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினரின் தினசரி வருமான மூன்றில் இரு பங்காக சுருங்கிவிட்டதாகவும், ஏழைகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், ரூ.150க்கும் கீழ் தினக்கூலி பெறுவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் பியூ அறிக்கையில், கொரோனா பாதிப்பின் விளைவாக, இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தின் எண்ணிக்கை 3.2 கோடியாக குறைந்துள்ளது. இது மக்களின் எண்ணிக்கையில் உலகளாவிய அளவில் 60 சதவீத சரிவு என கருதப்படுகிறது.

அதுமட்டுமின்றி, கொரோனா மந்தநிலையின் காரணமாக இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 7.5 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இது உலக வறுமை அதிகரிப்பில் கிட்டத்தட்ட 60 சதவீதமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை 13.4 கோடியாக அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியாவில் எல்லா வர்க்கத்திலும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவில் நடுத்தர வர்க்கத்தினரின் சரிவு வெறும் 1 கோடி என்றளவிலேயே இருக்கிறது. ஏழை மக்களின் எண்ணிக்கை 10 லட்சம் மட்டுமே அதிகரித்துள்ளது.

Also Read: “ஜெயலலிதா இருக்கும்போது, எடப்பாடி பழனிசாமி இருந்தாரா என்றே தெரியாது” : ப.சிதம்பரம் சாடல் !