India

கொரோனா ஊரடங்கால் 35 சதவீத இளைஞர்கள் வேலையிழப்பு : தோல்வியடைந்த பா.ஜ.க அரசு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

சீனாவின் வூஹான் நகரில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தொற்றியது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தது. வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதையடுத்து, இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே, ஜூன் மாதங்களில், அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் நகர்ப்புறங்களில் வேலை செய்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களை நோக்கிச் சென்றனர்.

மேலும், லட்சக்கணக்கான சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. சுற்றுலா, விமான சேவை, ஹோட்டல் தொழில் என பல்வேறு தொழில்களும் கொரோனா தாக்கத்தால் பெரும் பாதிப்பைச் சந்தித்தன.

இந்நிலையில், 2020ம் ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் காலாண்டில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், இந்தியாவில் உள்ள நகர்ப்புறங்களில் 21 விழுக்காடு வரை வேலையில்லாத் திண்டாட்டம் உயர்ந்துள்ளதாக ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த மாதங்களில், 15 முதல் 29 வயதான இளைஞர்கள், 35 சதவீதம் பேர் வேலை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா காலத்தில், முழு ஊரடங்கால் 12 கோடி பேர் வேலை இழந்ததாக சி.எம்.ஐ.இ என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் ஏற்கனவே தகவல் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "தாமதமாக உணவு கொண்டுவந்தது ஏன்?" : கேள்வி கேட்ட பெண்ணை தாக்கிய ZOMATO ஊழியர் - அதிர்ச்சி வீடியோ!