India

“காரில் கொக்கைன் கொண்டு சென்ற வழக்கில் பா.ஜ.க இளைஞரணி பொதுச் செயலாளர் கைது” : மே.வங்க போலிஸார் அதிரடி !

மேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி பொதுச் செயலாளராக இருப்பவர் பாமெலா கோஸ்வாமி. இவர் கொக்கைன் போன்ற போதைப் பொருட்களை காரில் கொண்டுச் செல்வதாக மேற்கு வாங்க காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் தனது காரில், நியூ அலிப்பூர் பகுதியில், இளைஞரணி பொதுச் செயலாளர் பாமெலா கோஸ்வாமி மற்றும் பா.ஜ.க இளைஞரணியை சேர்ந்த மற்றொரு நிர்வாகியான பிராபிர் குமார் தேவும் சென்றுள்ளனர். அப்போது அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையின் போது போலிஸாரிடம் முறையாக பதில் அளிக்காமலும், அலட்சியமாகவும் நடந்துக்கொண்டதாக கூறப்பட்டுகிறது. இதனையடுத்து ரோந்து பணியில் இருந்த போலிஸார் உயரதிகாரிகளின் அனுமதிப் பெற்று அவர்களின் காரை சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையின் போது பாமெலா கோஸ்வாமிவின் மணி பர்ஸிலும், கார் சீட்டுக்கு கீழும் சில லட்சங்கள் மதிப்புமிக்க கொக்கைன் இருந்துள்ளது.

இதனையடுத்து இந்தியாவில் தடை செய்யப்பட்ட கொக்கைனை காரில் கொண்டுச் சென்ற வழக்கில், பாமெலா கோஸ்வாமியையும், அவருடன் இருந்த பிராபிர் குமாரையும் போலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அம்மாநில மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரிமா பட்டாச்சார்யா கூறுகையில், “இந்த சம்பவத்தால் மேற்கு வங்கத்திற்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பா.ஜ.க உறுப்பினர்கள் சிலர் குழந்தை கடத்தல் தொடர்பான வழக்குகளிலும் அடிபட்டுள்ளது. இது தான் வளர்ந்து வரும் பா.ஜ.க உறுப்பினர்களின் உண்மை முகம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “பள்ளி வினாத்தாளில் டிராக்டர் பேரணி வன்முறை குறித்து சர்ச்சை கேள்வி” : இசைக்கலைஞர் T.M.கிருஷ்ணா கண்டனம்!